Monday, 20 April 2015

மும்முனை கொண்ட வாள்


நம் தாத்தாவும் பாட்டியும் காலை வரை காத்திருந்து செய்தித்தாளில் படித்த இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி மட்டும் இன்று வந்திருந்தால், 12:01  க்கே பல்லாயிரக்கணக்கான லைக்கள், பகிர்வுகளை குவித்து அடுத்த நாள் காலைக்குள் இறந்து புதைத்த செய்தி ஆகியிருக்கும்.
காலத்தின் ஓட்டத்தை மிஞ்சித் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்பதே இதற்கு காரணம். 1990 க்கு பின்னர் தான் உலகம் இணையத்தின் முழு ஆற்றலை உணர்ந்தது. தகவல் துறையையே புரட்டிப் போட்டது. செய்திகள் மக்களை அதி வேகத்தில் சென்றடைவதற்கு வழி வகுத்தது.  மொத்த இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் 8. 33% இந்தியர்கள் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 10 மடங்கு உயர்ந்துள்ளது. நமது ஜனத்தொகையுடன் ஒப்பிடுகையில் இது மிக சிறிய அளவு. எனினும் இணையம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதோ அதிகம். இளைஞர்களும் ACT  போல வேகமாக இருக்க விரும்புவதால் இணையமே அவர்களுக்கு இணையாகும். தொலைக்காட்சி நிருபர்களை செய்தி சென்றடையும் நேரத்திலேயே ட்வீட்களாகவும் ஸ்டேஸ்களாகவும் வெளியாகி விடுகின்றன. அதையே நகைச்சுவையாகக் கூற முடிந்தால் கூடுதல் சிறப்பு. இதையே இன்று இணைய உலகம் “ட்ரோல்” என்று அழைக்கிறது. சமீபத்திய பட்ஜெட் முதல் கிரிக்கெட் வரை எதுவும் இவர்களுக்கு விதிவிலக்கு இல்லை. பெரும்பாலும் நகைச்சுவையே நோக்கமாக இருந்தாலும் அவ்வப்போது சிந்திக்க வைக்கவும் தவறுவதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இணையத்தில் வரும் செய்திகள் பெரிதாக மதிக்கப்படவில்லை ஆனால் இன்று பல முக்கியச் செய்திகளை அறிவதற்கு ஏதுவாக இருப்பதே சமூக வலைதளங்கள் தான். உடனுக்குடன் தகவலை அளிக்கும் செய்தி நிறுவனங்களின் இணையதளங்கள், உலகத்தையே நமது உள்ளங்கையில் கொண்டு வந்துச் சேர்க்கின்றன. இணையத்தின் நன்மையாக பலரும் கூறுவது  99% கருத்துச் சுதந்திரம் தான். செய்திதாள்கள், தொலைக்காட்சிகளை போல இணையம் எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமில்லை. எனவே மீதி இரண்டு ஊடகங்களும் மறைக்கும், காண்பிக்க மறுக்கும் தகவல்களை பகிர சமூக வலைதளங்கள் ஒரு நல்ல தளத்தை அமைத்து தருகின்றன. பல முக்கியப் பரபரப்பானச் செய்திகளை முதலில் இணையதளங்களில் வெளியிடுவதே வழக்கம். இதுவே பலச் சமயங்களில் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் நிகழ்வாகவும் முடியலாம். சொந்தக் கற்பனை, விரோதத்தையெல்லாம் பதிவுகளில் கொட்டி தீர்த்தால். மான நஷ்ட வழக்கு தொடரப்படலாம், அந்த பதிவு அளிக்கப்படலாம், குறைந்த பட்சம் தவறான செய்தியை கூறியதற்கு, ட்ரோல் செய்யப்படலாம்.  
ஆனால் இன்று இந்தியாவில் 100 இல் 15 பேரை தான் இணையம் சென்றடைந்துள்ளது. முக்கால் வாசி மக்களுக்கு அறிமுகமே இல்லாத ஒரு ஊடகம் நன்மை செய்தால் என்ன தீமையாக இருந்தால் என்ன?
ஒரு வரியைக் கூட விடாமல் செய்தித்தாள் படிப்பவர்களை நீங்கள் பார்த்திருக்க கூடும் அப்பொழுதெல்லாம் செய்தித்தாள்கள் 6 அல்லது 7 பக்கம் தான் இருக்கும்.ஆனால் இன்று குறைந்தது 25 பக்கங்களுக்கு மேல் உள்ளது. முழுவதுமாக படித்து முடிப்பதற்குள் அடுத்த நாள் செய்தித்தாளே வந்துவிடும்.  இன்றும் அப்படி படிப்பது ஒரே ஒரு வர்க்கம் தான்.  உ .பி. எஸ். சி தேர்வுக்கு படிப்பவர்கள்.
அது அல்லாமல் பெரும்பாலான செய்தித்தாள்கள் பெரும் புள்ளிகளிடம் சிக்கி தவிப்பதால், ஒன்றுக்கு இரண்டு செய்தித்தாள்கள் படித்தால் தான் உண்மை நிலவரம் சற்று விளங்கும்.
உலக அளவில் கவனிக்கப்படும் போக்கு, செய்தித்தாள் நிறுவனங்கள் வயிற்றில் புளியை கரைக்கலாம். ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளில் செய்தித்தாள் விற்பனையில் ஒரு சரிவு காணப்பட்டது. குறிப்பாக வளர்ந்த நாடுகளில். இதனையும் தாண்டி பல நிறுவனங்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். இணையத்தின் ஆற்றலை சரி வர புரிந்து , தங்கள் பத்திரிக்கையை, இணையத்தை தழுவி இருக்கும் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேரத்தவர்களெல்லாம் இன்றும் போட்டியில் உள்ளனர். அதே கால கட்டத்தில் சில பத்திரிக்கைகள் அடையாளமே இல்லாம்ல் அழிந்து போயின. இதே நேரத்தில் தான் பல நாளிதழ்கள் ஓன்று இணைந்து செயலாற்ற தொடங்கின.
இன்று ஈ- பேப்பர் , இணையதளம், சமூக வலைதளம் என பரந்து விரிந்து உள்ளது செய்திதாள்களின் சாம்ராஜ்ஜியம்.
ஆனால் வெறும் காகிதம் தொலைக்காட்சியுடனும், இணையதளங்களுடனும் போட்டியிடுவது எப்படி.? மரபு மாறாத செய்தித்தாள்கள் என கருதப்பட்டவை கூட இன்று பெரும்பாண்மை மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யப் பொழுது போக்கு களத்தில் இறங்கி விட்டன. எந்த ஒரு ஊடகமும் மக்களின் போக்குடன் இயைந்து இருப்பதே அதனின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டதில் தொலைக்காட்சிக்கு பெரும் பங்கு உண்டு. பொதிகைத் தொலைக்காட்சியில் வரும் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகளை  சமுதாயக்கூடங்களில் ஒளிபரப்பி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது எல்லாம் அந்த காலம். இன்று சந்தை வியாபரம் போல அகிவிட்டது தொலைக்காட்சி நிறுவனங்கள். அதிக பரபரப்பும் ஆர்வமும் எற்ப்டுத்துகின்ற செய்திகளையே நிறுவனங்கள் விரும்புகின்றன. அவை சரியான ஆதாரங்களுடன் உள்ள செய்தியாக இல்லாவிடிலும். அதனை ஒரு கலந்துரையாடலுக்கான தலைப்பாக கொண்டு, தொண்டை கிழிய கூப்பாடு போட்டு அதனை உண்மை ஆக்கிவிடுவார்கள் போலும். 9/11 தாக்குதலின் போது ஒரு பிணத்தை கூட காமிக்க கூடாது என்ற கொள்கை யோடு இருந்தனர் அமெரிக்க ஊடகங்கள். ஏற்கனவே துயருற்று இருக்கும் இறந்தவர்களின் உறவுகளை மனதில் கொண்டு இந்தக் கொள்கை ஏற்க்கப்பட்டது. அத்தகைய ஒரு உயர்ந்த மனப்பாண்மையை இந்திய ஊடகங்களில் காண முடியாதது வருந்த தக்க விஷயம் ஆகும். ஆபாசம், வன்முறை என எந்த செய்தி கிடைத்தாலும் அதனை படம் பிடித்துக் காட்டுவதில் இருக்கும் முனைப்பு , சமூக அவலங்களை அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டுச் செல்வதில் குறைவாகவே உள்ளது. இல்லவே இல்லை என்றுக் கூற இயலாது, எனினும் நாட்டின் நிலைமையுடன் ஒப்பிடுகையில் போதுமானதாக இல்லை.
ஆனாலும் தொலைக்காட்சிக்கு இருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. காரணம்? தேர்தல் கொள்கைகள் தான். ஆட்சிக்கு வரும் வராத அனைத்து கட்சிகளும் கொடுக்கும் ஒரே அறிவிப்பு இலவச தொலைக்காட்சி. அதன் விளைவு இன்று தொலைக்காட்சி இல்லாத வீடு என்பது யாதெனின் எந்த ஒரு வீட்டில் 12 ஆவது படிக்கும் மாணவன் இருக்கிறானோ அதுவே ஆகும்
இப்படி பலத்தரப்பட்ட ஒரு சமூகத்திற்கு எப்படி ஒரு ஊடகம் மட்டும் போதுமானதாக இருக்கும். ஊடகங்களை குடியாட்சியின் நான்காவது தூண் என போற்றுவது உண்டு. அதனால் தான் என்னவோ ஊடகங்களுக்கான் கருத்து சுதந்திரத்தை கொடுக்க முனைந்த நாடுகளில் நாமும் ஒரு முன்னோடி. அப்படி பட்ட ஊடகம் மட்டும்  கறைகள் அற்றதா. என்ன? ஆனால் பொருளாதார மற்றும் கல்வி சார்ந்த இத்தனை ஏற்றத்தாழ்வுகளை கொண்ட சமூகத்திற்கு ஏற்ப தான் ஊடகங்கள் அமைந்துள்ளன. படிப்புறிவு பெற்றவர்களை இணையமும் செய்தித்தாள்களும் தங்கள் பக்கம் ஈர்க்க. பாமர மக்களுக்கு தொலைக்காட்சியும் எளிய நடையில் எழுதும் ஒரிரு நாளிதழ்களும் உறுதுணையாக உள்ளன.
சமீபத்தில் அமர்தயா சென் அவர்கள் “லோக் பால்  ஓரு சரியாக திட்டமிடப்படாத இரு சட்டம்” என கூறியதை அடுத்த நாள் பல பத்திரிக்கைகள் அமர்த்யா சென் லோக் பால் சட்டத்திற்கு எதிரானவர் என்றும் வேறு சில நாளிதழ்கள் அவரே அதனை ஆதரிக்கிறார் என்றும் ஒளிபரப்பின.இவை இரண்டில் எதனை நம்புவது.

  ஒரு நிறுவனத்தின் தவறை மற்ற நிறுவனங்கள் ஒருபோதும் சுட்டிக்காட்ட தவறியதில்லை.  ஆனால் மாற்றி மாற்றி கை காட்டி கொண்டே இருந்தால் யார் தான் பணியை செய்வது?